Reading Time: < 1 minute

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மற்றும் காங்கேசன்துறை இடையில் ரயில் கடவைகளில் உள்ள சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போது அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாதையை நவீனப்படுத்துவதற்கு வசதியாக கொழும்பில் – காங்கேசன்துறைக்கான சேவைகள் இந்த வருடம் ஜனவரி மாதம் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இந்தியாவால் நீடிக்கப்பட்ட கடன் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் இம்மாதத்தில் முடிவடைய இருந்தபோதிலும் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது.

இதேவேளை, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பயண நேரத்தை ஒன்றரை மணி நேரத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.