Reading Time: < 1 minute

இந்தியாவிலிருந்து சர்வதேச மாணவராக கனடா வந்த இளைஞர் ஒருவரை, ஏமாற்றி கொலை செய்தது ஒரு கூட்டம்.

பஞ்சாபிலுள்ள Nawanshahr மாவட்டத்தின் Karimpur Chahwala என்னும் கிராமத்திலிருந்து கல்வி கற்பதற்காக கனடா வந்திருந்தார் இந்தியரான குர்விந்தர் நாத் (Gurvinder Nath, 24).

குர்விந்தர், விடுமுறையில் பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்துவந்துள்ளார்.

இம்மாதம், அதாவது ஜூலை 9ஆம் திகதி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிலர் பீட்சா ஆர்டர் செய்ய, அங்கு பீட்சா டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார் குர்விந்தர்.

ஆனால், உண்மையில் குர்விந்தரின் காரை திருடுவதற்காகவே சிலர் அவரிடம் போலியாக பீட்சா ஆர்டர் செய்துள்ளதாக கருதப்படுகிறது. குர்விந்தர் பீட்சா டெலிவரி செய்ய அங்கு சென்றதும், அங்கிருந்தவர்கள் அவரது காரைக் கடத்த முயன்றிருக்கிறார்கள். குர்விந்தர் தடுக்க, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

குர்விந்தரை கடுமையாக தாக்கிவிட்டு அந்த மர்ம நபர்கள் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்கள். கடுமையாக தாக்கப்பட்ட குர்விந்தரை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.

கோமா நிலையிலிருந்த குர்விந்தர், சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஜூலை 14ஆம் திகதி உயிரிழந்துவிட்டார்.

இந்தியாவிலுள்ள குர்விந்தரின் உறவினர்களுக்கு அவர் கொல்லப்பட்டது குறித்த தகவல் பகிரப்பட்டுள்ளது.

ஆனால், மகன் கொல்லப்பட்ட செய்தியை குர்விந்தரின் தாயால் தாங்க இயலாது என்பதால், குர்விந்தர் கொல்லப்பட்ட செய்தியை அவரது தாயாகிய நரீந்தர் கௌரிடமிருந்து மறைத்துள்ளார்கள் அவரது உறவினர்கள்.

இந்நிலையில், நேற்று மாலை குர்விந்தரின் உடல் இந்தியா வருவதற்கு முன், குர்விந்தர் கொல்லப்பட்ட விடயம் அவரது தாயிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகன் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்த குர்விந்தரின் தாய், விஷம் குடித்துள்ளார். மகனுடைய உடலைக் காண்பதற்கு முன்பே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மகன் கொல்லப்பட்டதை அறிந்து தாய் தற்கொலை செய்துகொண்ட விடயம், Karimpur Chahwala கிராமத்தினரை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.