Reading Time: < 1 minute

கனடா அமெரிக்க எல்லையில் குழந்தைகள் உட்பட இந்தியக் குடும்பம் ஒன்று குளிரில் உறைந்து பலியான சம்பவம் நினைவிருக்கலாம்.

2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் குளிரில் உறைந்து பரிதாபமாக பலியானது.

இந்த துயர சம்பவம் தொடர்பாக, அமெரிக்க அதிகாரிகள், மேலும் இருவர் மீது தற்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளார்கள். ப்ளோரிடாவைச் சேர்ந்த Steve Shand of Deltona மற்றும் ப்ளோரிடாவில் வாழும் இந்தியரான Harshkumar Ramanlal Patel ஆகிய இருவர் மீதும்தான் தற்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இருவர் மீதும், அந்நியர்களை அமெரிக்காவுக்குள் கடத்தும் முயற்சியில் அவர்களுக்கு காயம் ஏற்படுத்தியது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது, தனிப்பட்ட முறையிலான பண மற்றும் பிற ஆதாயங்களுக்காக அவர்களைக் கடத்த உதவியது முதலான குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடையவர் என இந்திய அதிகாரிகளால் கூறப்படும் Fenil Patel என்பவர் மீது கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அவர் ரொரன்றோவுக்கு வெளியே சுதந்திரமாக தனது வீட்டில் வசித்துவருகிறார்.

ஊடகவியலாளர்கள் அவரது வீட்டுக்கும் முன் நின்றுகொண்டு அவரைக் கேள்வி எழுப்பியபோது, அவர் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக வீட்டுக்குள் சென்றுவிட்டார்.