Reading Time: < 1 minute

கணவனுடைய செலவில் கனடா சென்ற இந்தியப் பெண் ஒருவர், கனடாவில் படிப்பு முடிந்ததும், கணவனுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டுள்ளார்.

Tamil Business Directory

இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் அம்ரிக் சிங். 2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், தனது மகனான ஜக்ரூப் சிங்கிற்கு, ஜாஸ்மின் கௌர் என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்துள்ளார்.

டிசம்பரில் ஜாஸ்மின் கனடா செல்ல, இரண்டு ஆண்டுகள் அவருடைய படிப்பிற்காக ஜக்ரூப் குடும்பத்தினர் பணம் அனுப்பிவைத்துள்ளார்கள்.

படிப்பு முடிந்ததும், கணவர் குடும்பத்துடனான உறவைத் துண்டித்துள்ளார் ஜாஸ்மின். ஆகவே, தங்களை அவர் ஏமாற்றிவிட்டதாக ஜக்ரூப் குடும்பத்தினர் பொலிசில் புகாரளிக்க, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஜாஸ்மின் மீது மோசடி, நம்பிக்கை துரோகம் முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதுடன், அவர் இந்தியா வந்ததும் கைது செய்வதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஜாஸ்மின் படிப்பிற்காக 28 லட்ச ரூபாய் செலவு செய்ததாக ஜக்ரூப் குடும்பத்தினர் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், தனது சகோதரியின் திருமணத்துக்காக கடந்த வாரம் இந்தியா வந்துள்ளார் ஜாஸ்மின். 9ஆம் திகதி டெல்லி விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கியதும், பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.

10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட ஜாஸ்மின், காவலில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணையின்போது, தனது படிப்புக்காக தனது கணவர் குடும்பம் தனக்கு 14 லட்ச ரூபாய் அனுப்பியதாக கூறியுள்ளார் அவர்.

இனி பெண்கள் இப்படி மோசடியில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தான் புகாரளித்ததாக அம்ரிக் சிங் கூறியிருந்த நிலையில், தற்போது ஜாஸ்மின் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தனக்கு தகவல் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.