பல்லின கலாச்சாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கனடாவில், சமீப காலங்களில் குடியேறிய புதியவர்களில் பெரும்பாலானோர் பாகுபாட்டை எதிர்கொள்வதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
WPP Canada மேற்கொண்ட இந்த ஆய்வின்படி, புதிய குடியேறிகளில் 10 பேரில் 9 பேர் ஏதோ ஒரு வகையில் பாகுபாட்டை அனுபவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பாகுபாட்டிற்கான முக்கிய காரணங்களாக இனம், மொழி மற்றும் உச்சரிப்பு, கல்வி மற்றும் வேலை அனுபவம் அங்கீகரிக்கப்படாதது போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறிப்பாக, 31 சதவீதமானோர் தங்களின் மொழி மற்றும் உச்சரிப்பு காரணமாக நேரடியாக புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், 80 சதவீத சம்பவங்களில் இது மறைமுக காரணமாக இருப்பதும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் தாக்கமாக, 16 சதவீதமானோர் “கனடாவில் பிறந்தவர்களுக்கே முழுமையான அங்கீகாரம் கிடைக்கும்” என்ற எண்ணத்தை கொண்டுள்ளனர்.
இத்தகைய அனுபவங்கள் காரணமாக, புதிய குடியேறிகளில் ஒரு பகுதி மக்கள் சமூகத்தில் கலந்துசேராமல், தங்களது சொந்த சமூகங்களுக்குள் மட்டுமே இருக்க விரும்பும் நிலையும் உருவாகியுள்ளது.
மேலும் கவலைக்கிடமாக, இந்த எதிர்மறை அனுபவங்களின் விளைவாக, 29 சதவீதமானோர் மட்டுமே கனடாவில் நிரந்தரமாக தங்கி வாழ விரும்புகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது.
ஆய்வில் பங்கேற்றவர்கள், “கனடா என்பது வரலாறு அல்லது சின்னங்களைப் பற்றியது மட்டுமல்ல; அது கருணை, சமத்துவம் போன்ற மதிப்புகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.