ஈழ விடுதலைக்காகப் பெருங்களங்கள், தியாகங்கள் சந்தித்த ஒரு ஈழத் தளபதியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர், சுயாதீன ஊடகவியலாளர் திரு தீபச்செல்வன் எழுதிய “சயனைட்” என்ற நாவலின் வெளியீட்டு விழா, இன்று (ஜூலை 27, 2025) மாலை 4 மணிக்கு கனடாவின் மார்க்கம் நகரில் அமைந்துள்ள கனடிய வர்த்தக சங்க மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

“பயங்கரவாதி”, “நடுகல்” போன்ற நாவல்கள் மூலம் உலகத் தமிழர்களின் மனதையும், சிங்கள இலக்கியவாதிகளின் கவனத்தையும் ஈர்த்த எழுத்தாளர் தீபச்செல்வன், தனது மூன்றாவது நாவலாக “சயனைட்” நாவலை எழுதியுள்ளார்.
“சயனைட்” என்பது ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஓர் மதிப்பு மிக்க குறியீடாக, குறியீட்டுப் பொருளாக உலகத் மக்களால் பார்க்கப்பட்டது. போராளிகள் எதிரியிடம் உயிருடன் அகப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிந்து வந்தனர். இது ஈழப்போராளிகளின் தியாகத்தையும், விடுதலைக்கான நம்பிக்கையையும் வெளிப்படுத்திய மாபெரும் அடையாளமாகும்.
உலக வரலாற்றில் தகவல் காப்பிற்காக சயனைட் பயன்படுத்தப்பட்ட சிறப்பு நிகழ்வுகளில், ஈழ விடுதலைப் போராட்டம் குறிப்பிடத்தக்க ஒன்று என்பதை இந்த நாவல் மீண்டும் வலியுறுத்துகிறது.
வலி மிகுந்த போராட்டத்தில் பலவீனமான மனித உடலின் பலவீனமான மனித மனங்களின் பலமான தகவல் பாதுகாப்பு ஆயுதமாக ஈழப்போராளிகள் சயனைட்டினை பயன்படுத்தியிருந்தனர்.

நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “சயனைட்” நாவல், வெளியான இரண்டு மாதங்களுக்குள் மறுபதிப்பையும் கண்டுவிட்டு, வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நாவல், சயனைட் அருந்தி வீர மரணம் ஏற்ற தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு சமர்ப்பணமாகும் ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய விழாவில் கவிஞர்கள், மூத்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் தமிழ்துறை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.





