ஈரான் அரசுக்கு எதிராக அமைதியாக போராடிய குடிமக்கள் கொல்லப்பட்டதும், பலர் கைது செய்யப்பட்டதையும் கனடா அரசு கடுமையாக கண்டித்துள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக “அதிகப்படியான மற்றும் உயிர்ப்பறிக்கும் வன்முறையை” பயன்படுத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என கனடாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அனிதா ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில், தங்களின் மரியாதைக்கும், அமைதியான போராட்டம் நடத்தும் அடிப்படை மனித உரிமைக்கும் ஈரான் மக்கள் துணிச்சலுடன் குரல் கொடுத்து வருவதை கனடா உள்ளிட்ட நாடுகள் மதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போராட்டக்காரர்கள் கொல்லப்படுதல், வன்முறை பயன்பாடு, கைது நடவடிக்கைகள் மற்றும் மிரட்டல் உத்திகள் ஆகியவற்றை ஈரான் அரசு தன் சொந்த மக்கள்மீது மேற்கொள்வதை சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியாக கனடா கடுமையாக கண்டிப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஈரான் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளால் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. எனினும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிப்பதன்படி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.




