கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம், 2026 ஆம் ஆண்டிற்கான தனது முதலாவது எக்ஸ்பிரஸ் அனுமதி குலுக்கலை நேற்று (ஜனவரி 05) நடத்தியுள்ளது. மாகாண நியமனத் திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்காகவே இத்தேர்வு பிரத்யேகமாக நடத்தப்பட்டது.
இந்தச் சுற்றில் மொத்தம் 574 விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் பெற்ற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 711 சி.ஆர்.எஸ் புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
சில முக்கியமான முன்னுரிமை
2025 அக்டோபர் 06 ஆம் திகதி அன்று அதிகாலை 01:54 மணிக்கு முன்னதாகத் தமது விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான குடியேற்றக் கொள்கையின்படி, கனடா அரசாங்கம் சில முக்கியமான முன்னுரிமைகளை அறிவித்துள்ளது. ஏற்கனவே கனடாவில் தற்காலிகமாக வசித்து வரும் மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதில் அதிக கவனம் செலுத்தப்படும்.
கியூபெக் மாகாணத்திற்கு வெளியேயான பகுதிகளில் பிரெஞ்சு மொழி பேசும் குடியேறிகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதால், மொழித் திறன் அடிப்படையிலான தேர்வுகள் அதிகரிக்கக்கூடும்.
கனடாவில் பணி அனுபவம் பெற்ற வெளிநாட்டு மருத்துவர்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரிவின் கீழ் குலுக்கல்கள் இந்த ஆண்டு ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண நியமனம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மேலதிகமாக 600 புள்ளிகள் வழங்கப்படுவதால், இவ்வகையான குலுக்கல்களில் வெட்டுப் புள்ளிகள் பொதுவாக அதிகமாகக் காணப்படுகின்றன.
அழைப்பிதழ் பெற்றவர்கள் அடுத்த 60 நாட்களுக்குள் தமது முழுமையான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




