கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவி ஒருவர் மாயமான நிலையில், அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த வன்ஷிகா (21) என்னும் இளம்பெண், இரண்டரையாண்டுகளுக்கு முன் கல்வி கற்பதற்காக கனடாவுக்குச் சென்றுள்ளார்.
வன்ஷிகாவின் தந்தையான தேவிந்தர் சிங், அரசியல் கட்சி ஒன்றின் தலைவர்களில் ஒருவராவார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி, வாடகைக்கு அறை ஒன்றைப் பார்ப்பதற்காக இரவு 8.00 முதல் 9.00 மணியளவில் வெளியே சென்றுள்ளார் வன்ஷிகா.
இரவு 11.40 மணியளவில் அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும், மறுநாள் அவருக்கு ஒரு முக்கியமான தேர்வு இருந்துள்ளது.
ஆக, இப்படி தாமதமாக வெளியில் தங்குவதோ, மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்வதோ வன்ஷிகாவின் வழக்கமல்ல என்கிறார்கள் அவரது தோழிகள். வன்ஷிகாவின் பெற்றோருக்கு தகவலளிக்கப்பட, அவர்கள் தூதரகத்தை அணுக, வன்ஷிகாவை தேடும் முயற்சியில் தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
ஆனால், தற்போது வன்ஷிகா தொடர்பில் ஒரு துயரச் செய்தி கிடைத்துள்ளது.
ஆம், Ottawaவிலுள்ள கடற்கரை ஒன்றில் வன்ஷிகாவின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
காணாமல் போன வன்ஷிகா உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அதன் பின்னணியில் குற்றச்செயல் ஏதேனும் இருக்கக்கூடும் என அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கிறார்கள்.
வன்ஷிகா மாயமானது, மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பில் விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.




