Reading Time: < 1 minute

பெண்ணொருவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன் கனேடிய குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், திடீரென அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளதால், கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் அவர்.

பல ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்துவந்தவரான Nichola என்னும் பெண், கர்ப்பமுற்றதால், கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின்போதும் உதவி செய்ய ஆட்கள் தேவை என்பதால் தனது உறவினர்கள் வாழும் ஜமைக்கா நாட்டுக்குச் சென்றுள்ளார்.

1991ஆம் ஆண்டு, அவருக்கு Arielle Townsend என்னும் பெண் குழந்தை பிறந்துள்ளது. Arielle பிறந்து சில மாதங்கள் ஆன நிலையில், 1992ஆம் ஆண்டு, அவரது தாயான Nichola கனடா திரும்பி, தனது மகளுக்கான குடியுரிமைக்காக Mississaugaவிலுள்ள குடியுரிமை அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த அலுவலர் ஒருவர், Arielle ஏற்கனவே கனேடிய குடிமகள்தான் என்றும், அவருக்காக மீண்டும் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

இது நடந்து 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், Arielleக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், அவரது குடியுரிமை ரத்து செய்யப்படுவதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கு அவர்கள் கூறியுள்ள காரணம், Arielle பிறக்கும் முன், அவரது தாய் குடியுரிமை பெறுவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ளவில்லை என்பதாகும். ஆகவே, Arielleக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்படவேயில்லை என தற்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

தற்போது Arielle கனேடிய குடிமகள் இல்லையானால், அவர் இனி தொடர்ந்து வேலை செய்யமுடியாது. அவர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர் குடியுரிமை பெறும் வரை கனடாவில் வேலை செய்யவும் முடியாது. அத்துடன், அவரது தந்தை அமெரிக்காவில் வாழும் நிலையில், Arielleஆல் தன் தந்தையை சென்று சந்திக்கவும் முடியாத நிலை உருவாகியுள்ளது.

மேலும், அவர் மீண்டும் குடியுரிமை பெற நூற்றுக்கணக்கான டொலர்கள் செலவுசெய்யவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கனேடிய குடிமகள் என நினைத்து வாழ்ந்துவந்த நிலையில், மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்கிறார் Arielle. இது கொஞ்சம் கூட மனிதத்தன்மையற்ற செயல் என்கிறார் அவர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.