Reading Time: < 1 minute

மனிடோபாவில் செயின்ட் போனிஃபேஸ் உதிரிப்பாக கடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

புரோவெஞ்சர் பவுல்வர்ட் மற்றும் செயின்ட் ஜோசப் வீதியின் மூலையில் உள்ள ஒரு உதிரிப்பாக கடையிலேயே நேற்று (வியாழக்கிழமை) இரவு 8 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியிலுள்ள ஐந்து குடியிருப்பாளர்களும், சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒருவருமே இவ்வாறு தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களின் காயங்களின் தன்மை குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.

இந்த வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தை அணைக்க சுமார் அரை டசன் தீயணைப்பு வண்டிகளும், சுமார் 28 தீயணைப்பு வீரர்களும் போராடியதாக வின்னிபெக் ஃபயர் பாராமெடிக் சர்வீஸ் படைப்பிரிவின் தலைவர் ஆல்டன் டெர்ராக் தெரிவித்துள்ளார்.

இந்த தீ பரவலுக்கான காரணம், சேத விபரம் உள்ளிட்ட விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை. எனினும் தீக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.