Reading Time: < 1 minute

புலம்பெயர்தல் என்பது நீண்ட காலமாகவே நிகழ்ந்து வரும் ஒரு நிகழ்வாகும். மனித இனத்தில் மட்டுமல்ல, அது பறவை இனங்களில் கூட காணப்படும் ஒரு இயற்கை நிகழ்வு.

இன்று புலம்பெயர்தல் எதிர்மறையான ஒன்றாக சில நாடுகளால் காட்டப்படுகிறது. ஆனால், உலகம் என்னும் சமுதாயத்திற்கு புலம்பெயர்தல் என்பது நன்மை பயக்கும் ஒரு விடயமாகும்.

புலம்பெயர்வோர் ஒரு நாட்டுக்கு புலம்பெயர்ந்து அங்கு வேலை செய்வதால் அவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. அதே நேரத்தில், அந்த நாட்டின் பணியாளர் பற்றாக்குறை பிரச்சினை தீர்க்கப்படுவதுடன், இந்த புலம்பெயர்ந்தோரால், தங்கள் நாட்டின் வருவாய் மட்டுமல்ல, தாங்கள் வேலை செய்யும் அந்நாட்டின் பொருளாதாரமும் உயர்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

கனடா ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், இம்மாதம், அதாவது ஜூன் மாதம் 16ஆம் திகதி, மதியம் 3.00 மணியளவில் கனடாவின் மக்கள் தொகை 40 மில்லியனைத் தொட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இது கனடாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தியாகும் என்கிறார் கனடாவின் தலைமை புள்ளியியலாளரான Anil Arora.

அதாவது, உலக நாடுகள் பலவற்றில் இப்போது ஒரு பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது. ஆம், பிறப்பு வீதம் குறைந்து வருகிறது.

குழந்தைகள் பிறந்தால்தானே நாட்டின் மக்கள்தொகை உயரும். ஆக, ஏராளமானோர் ஆண்டுதோறும் ஓய்வு பெறுகிறார்கள். மருத்துவ உதவிகள் நீண்ட காலம் வாழ வழிவகை செய்கின்றன. ஆனால், புதிதாக குழந்தைகள் பிறக்காததால், நாடுகளில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது, இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

ஆகவே, சில நாடுகள் குழந்தை பெற்றுக்கொள்வோருக்கு சலுகைகள் அறிவிக்கின்றன. ஊதியத்துடன் விடுப்பு அளிக்கின்றன. குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என அரசு இளைஞர்களுக்கு கோரிக்கை விடுக்கிறது.ஆக, ஒரு நாட்டின் மக்கள்தொகை அதிகரிக்க குழந்தைகள் பிறப்பது அவசியம். அது இயற்கையாக நிகழவேண்டிய ஒன்று. பிறப்பை நாம் வலுக்கட்டாயமாக உயர்த்த முடியாது. எனவே, சில நாடுகள், புலம்பெயர்ந்தோரை தங்கள் நாட்டுக்குக் கவர்ந்திழுப்பதன்மூலம் தங்கள் நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்கின்றன.

மக்கள்தொகை அதிகரித்துவிட்டது என கவலைப்பட்ட காலம்போய், புலம்பெயர்ந்தோரால் எங்கள் நாட்டின் மக்கள்தொகை அதிகரித்துள்ளது என ஒரு நாடு மகிழ்வது அந்நாட்டுக்கு மட்டுமல்ல, தங்கள் தேவைகளுக்காக புலம்பெயர்வோருக்கும் மகிழ்ச்சியான செய்திதானே!