Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் அரங்கேற்றப்பட்டு வந்த “அதிநவீன கிஃப்ட் கார்டு மோசடி” தொடர்பாக இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹால்டன் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

கடந்த 2025 டிசம்பரில் பெர்லிங்டன் பகுதியில் உள்ள வால்மார்ட் கிளை ஒன்றில் நடந்த சந்தேகத்திற்கிடமான மோசடி குறித்த முறைப்பாடு ஒன்றை அடுத்து இப்புலனாய்வு விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

விசாரணையின் போது, சந்தேக நபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்து கிஃப்ட் கார்டுகளை எடுத்து, கடையில் உள்ள விற்பனை அடுக்குகளில் வைப்பதை அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

பின்னர், அவர் மேலும் சில கிஃப்ட் கார்டுகளை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு பணம் செலுத்தாமலும், ‘ஆக்டிவேட்’ செய்யாமலும் ரகசியமாக மறைத்துக்கொண்டு கடையை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த மோசடித் திட்டத்தின்படி, மோசடிக்காரர்கள் முதலில் கடைகளில் உள்ள கிஃப்ட் கார்டுகளின் பார்கோடு மற்றும் ரகசிய எண்களைத் திருடிவிட்டு, அவற்றை மீண்டும் கடைகளின் விற்பனை அடுக்குகளில் கொண்டு போய் வைத்துவிடுவார்கள்.

பின்னர், வாடிக்கையாளர்கள் யாராவது அந்த கார்டுகளை விலைக்கு வாங்கி பணம் நிரப்பும் வரை காத்திருப்பார்கள்.

வாடிக்கையாளர் பணம் நிரப்பிய அடுத்த கணமே, அவர்கள் பயன்படுத்துவதற்கு முன்பாகவே, மோசடிக்காரர்கள் தங்களுக்கு தெரிந்த ரகசிய எண்களைப் பயன்படுத்தி அந்த பணத்தை ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கப் பயன்படுத்திக் கொள்வர்.

இந்த விவகாரம் ஒன்டாரியோ மாகாணம் முழுவதும் பரவலாக நடப்பதை அறிந்த காவல்துறை, இதற்கு “புரொஜெக்ட் ரீலோட்” எனப் பெயரிட்டு தீவிர விசாரணையை முடுக்கிவிட்டது.

ஹால்டன், ஹாமில்டன், டொராண்டோ, பீல், யோர்க் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த மோசடி அரங்கேறியிருப்பது கண்டறியப்பட்டது. மோசடியை உறுதி செய்வதற்காக, காவல்துறையினர் சில கிஃப்ட் கார்டுகளில் தாங்களாகவே பணத்தை நிரப்பி சோதித்த போது, சந்தேக நபர்கள் உடனடியாக அந்தப் பணத்தைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கியது ஆதாரங்களுடன் நிரூபணமானது.

இதனையடுத்து, மிசிசாகா பகுதியில் இம்மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 48 வயதான ஜியோர்ஜி காண்டோலிஷ்விலி மற்றும் 40 வயதான ஜெவ்கெனி பிகுனோவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 1 மில்லியன் டாலர் (சுமார் 10 லட்சம் டாலர்) இழப்பு ஏற்படுத்தக்கூடிய 5,700-க்கும் மேற்பட்ட போலி கிஃப்ட் கார்டுகள், 11,000 டாலர் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள், 8,000 டாலர் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், சொகுசு பிஎம்டபிள்யூ கார், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், நகைகள் மற்றும் கிஃப்ட் கார்டுகளை தயாரிப்பதற்கும், அவற்றை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்கள் மற்றும் கார்டு பிரிண்டர்கள் ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.