Reading Time: < 1 minute

கனடாவில் காரில் குழந்தை பிறந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள ‘டிரான்ஸ்-கனடா’ நெடுஞ்சாலையின் 242-வது மைல்கல்லை மரியா ஜாக்சன் மற்றும் பெர்னாண்டோ கோன்சலஸ் தம்பதியினருக்கு இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது.

Tamil Business Directory

இனி எப்போது கடந்து சென்றாலும், தங்களது பச்சிளம் மகனின் பிறந்தநாள் நினைவுக்கு வராமல் இருக்காது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில், அங்குதான் அவர்களின் வாழ்க்கைப்பயணத்தில் மறக்க முடியாத அந்த விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது என தெரிவிக்கின்றனர். மரியாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

அவர்கள் வசிக்கும் ஜாக்சன்வில் பகுதியில் இருந்து வெறும் 7 நிமிட தூரத்திலேயே ‘அப்பர் ரிவர் வேலி’ மருத்துவமனை இருந்தது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக பிரசவ விடுதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இதனால், ஒரு மணி நேரத்திற்கும் அதிக தூரத்தில் உள்ள ஃபிரெடெரிக்டன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இத்தம்பதிக்கு ஏற்பட்டது. காரில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மரியாவுக்கு பிரசவ வலி தாங்க முடியாத அளவுக்கு தீவிரமடைந்தது.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த மரியாவின் தாய், உடனடியாக அவசர உதவிப் பிரிவான 911-க்கு அழைத்தார். அங்கிருந்து கட்டுப்பாட்டு அதிகாரி நேரடியாக காரை ஓட்டிக்கொண்டிருந்த கணவர் பெர்னாண்டோவைத் தொடர்புகொண்டுள்ளார்.

அப்போது கார், இலக்கை அடைய இன்னும் 45 நிமிடங்கள் உள்ள நிலையில் ‘நெகாவிக்கு’ (Nackawic) அருகே சென்று கொண்டிருந்தது. மரியாவோ, “குழந்தை வெளியே வருகிறது, என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை!” என சத்தமிட்டார் என குறிப்பிடுகின்றார்.

நிலைமையைப் புரிந்துகொண்ட அவசரப் பிரிவு அதிகாரி, “உடனே காரை ஓரங்கட்டுங்கள்!” என காலை 9:15 மணிக்கு உத்தரவிட்டார்.

அடுத்த மூன்றாவது நிமிடம்… அதாவது காலை 9:18 மணிக்கு, நெடுஞ்சாலை ஓரத்திலிருந்த காரினுள்ளேயே பெர்னாண்டோவின் கைகளில் ‘லியாம்’ (Liam) என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மறுமுனையில் அதிகாரி போனில் சொன்ன அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன். அடுத்த ஒரு நிமிடத்தில் குழந்தை என் கைகளில் இருந்தது!” என அந்த சிலிர்ப்பான நிமிடங்களை விவரித்தார் தந்தை பெர்னாண்டோ.

பிறந்தவுடன் குழந்தை அழவில்லை, உடல் மிகவும் தளர்ந்து, நீல நிறமாக மாறியிருந்தது. ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்குத் தாயான மரியா, சற்றும் பதறாமல் சாதுரியமாகச் செயல்பட்டு குழந்தைக்குச் சுவாசத்தை ஏற்படுத்தினார்.

குழந்தை அழத் தொடங்கிய 10 நிமிடங்களில் அங்கு வந்தடைந்த அவசர மருத்துவக் குழுவினர் (Paramedics), தாயையும் சேயையும் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், தாயும் குழந்தையும் நலம் பெற்றுள்ளனர்.

“எல்லாம் நல்லபடியாக முடிந்ததால் இப்போது இதை நினைத்துச் சிரிக்கிறோம். ஆனால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் நாங்கள் ஒன்றும் மருத்துவ நிபுணர்கள் இல்லையே, நினைத்தாலே பயமாக இருக்கிறது” என மரியா குறிப்பிடுகின்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.