Reading Time: < 1 minute

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த முன்னாள் மாணவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள அதே நேரத்தில், ஏற்கனவே சில மாணவர்கள் நாடுகடத்தப்பட்டுவிட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

சர்வதேச மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலை

கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் சுமார் 700 பேருடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள்.

இந்திய தரப்பிலிருந்தும் கனடா தரப்பிலிருந்தும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அந்த முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவருடைய வழக்கும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் வரை, அவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் வழங்க கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாயிற்று.

ஏற்கனவே சில மாணவர்கள் நாடுகடத்தப்பட்டாயிற்று
இந்நிலையில், அந்த முன்னாள் மாணவர்களில் சிலர் ஏற்கனவே கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டாயிற்று என்றும், வேறு சிலரோ, தாமாகவே கனடாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி கிடைத்துள்ளது.

அது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, ஏற்கனவே சில இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர், வேறு சிலரோ, தாமாகவே கனடாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்று கூறியுள்ளதுடன், அவர்களைப் பொருத்தவரை, தாங்களும் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அவர்கள் நிரூபித்தால், தற்போது கனடாவிலிருக்கும் முன்னாள் மாணவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறதோ,

அதே பலன்கள் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மற்றும் வெளியேறிய மாணவர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.