Reading Time: < 1 minute

கனடாவில் உண்ணிகளின் நடமாட்டமும், அவற்றால் பரவக்கூடிய ‘லைம் நோய்’ பாதிப்புகளும் கணிசமாக அதிகரித்து வருவதாக தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Tamil Business Directory

தற்போது அதிகாரப்பூர்வமாகப் பதிவாகும் எண்ணிக்கைகளை விட, உண்மையான பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

உண்ணிகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு தளமான eTick.ca-வின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், கனடா முழுவதும் உண்ணிகள் தொடர்பான பதிவுகள் சுமார் 38.5 சதவீதம் அதிகரித்துள்ளன.

கனடா பொது சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 7,105 லைம் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது இதுவரை பதிவான அதிக எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.

கனடாவில் உண்ணிகள் அதிகமாகக் காணப்படும் மாகாணங்களில் ஒன்றான ஒன்ராறியோவில், இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 359 லைம் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் 11 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன.

இருப்பினும், தற்போதைய எண்ணிக்கைகள் முழுமையான நிலையை பிரதிபலிக்காமல் இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பலருக்கு அறிகுறிகள் தெளிவாகத் தெரியாமல் போகலாம் அல்லது நோய் தாமதமாகக் கண்டறியப்படலாம் என்பதால், பதிவான எண்ணிக்கையை விட உண்மையான பாதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் கூறுகையில், பொதுமக்களிடமும் ஆரம்பக்கட்ட சுகாதார சேவை வழங்குநர்களிடமும் விழிப்புணர்வு அதிகரித்தால்தான், லைம் நோயை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

லைம் நோயின் ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு மற்றும் சிலருக்கு தோலில் பரவும் சிவப்பு வளையம் போன்ற ரேஷ் ஆகியவை அடங்கும். உண்ணி கடித்த பிறகு இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

காலநிலை மாற்றம் காரணமாக உண்ணிகள் புதிய பகுதிகளுக்கு பரவி வருவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லைம் நோய் மட்டுமன்றி, அனபிளாஸ்மோசிஸ், பபெசியோசிஸ் மற்றும் போவாசன் வைரஸ் போன்ற குறைவாக அறியப்படும் பிற உண்ணி மூலம் பரவும் தொற்றுகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

ஒன்ராறியோவில் இந்த ஆண்டு இதுவரை 36 அனபிளாஸ்மோசிஸ் பாதிப்புகளும், ஒரு போவாசன் வைரஸ் பாதிப்பும் பதிவாகியுள்ளன.

வெளிப்புறப் பகுதிகளில் செல்லும் மக்கள், குறிப்பாக புல்வெளி, காடு மற்றும் புதர்பகுதிகளில் நடமாடுபவர்கள், நீளமான ஆடைகள் அணிதல், பூச்சி விரட்டும் மருந்து பயன்படுத்துதல், வீட்டிற்கு திரும்பியதும் உடலைச் சோதித்தல், உண்ணி இருந்தால் உடனடியாக சரியான முறையில் அகற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.