Reading Time: < 1 minute

ஒன்ராறியோவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் கொரோனா பாதிப்பால் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது.

ஒன்ராறியோவின் Oro-Medonte பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான Garry Weston என்பவரே கொரோனாவுக்கு பலியானவர். Garry Weston தமக்கு மிகவும் பிடித்தமான ஹொக்கி விளையாட்டில் கலந்து கொண்ட பின்னரே அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

75 வயதான Garry Weston கடந்த செப்டம்பர் மாதம் ஹொக்கி போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 18 மாதங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட குறித்த ஹொக்கி போட்டியில் கலந்துகொண்டவர்களில் 15 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதில் ஒருவரே Garry Weston. போட்டியில் கலந்து கொண்ட பின்னர் சில நாட்களில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட பின்னரும் அவருக்கு பாதிப்பு அதிகமானதாகவே கூறப்படுகிறது.

தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்துள்ளனர். ஆனால் உயிர் பிழைக்கும் நிலையில் அவர் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, குடும்பத்தாரின் அனுமதியுடன் அவருக்கான சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் Garry Weston அக்டோபர் 21ம் திகதி மருத்துவமனையில் வைத்தே மரணமடைந்துள்ளார். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டும் கொரோனா பாதிப்பால் Garry Weston மரணமடைந்துள்ளது, அவரது குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது.

Garry Weston-ன் மறைவு எஞ்சிய மக்களுக்கும், தடுப்பூசிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கும் பாடம் என்றே அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் அவர் காப்பாற்றப்பட்டு வந்தார் எனவும், ஆனால் அவருக்கு மிகவும் பிடித்தமான ஹொக்கி விளையாட்டில் கலந்து கொள்ள சென்றது வினையாக முடிந்தது என்கிறார்கள் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும்.