Reading Time: < 1 minute

உக்ரேனிய விமானம் 176 பயணிகளுடன் சுட்டுவீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ஈரானிடம் 1 பில்லியன் டொலர் இழப்பீடு கோருவதற்கு கனடா திட்டமிட்டுள்ளது.

Tamil Business Directory

உக்ரேனிய விமானத்தின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கனேடிய வழக்கறிஞர்கள் தெஹ்ரான் மீது ஒரு வர்க்க நடவடிக்கை வழக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த வழக்கு கடந்த ஜனவரி 24ஆம் திகதி ரொறன்ரோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம், ஈரான் புரட்சிப் படையின் மூத்த தளபதியின் படுகொலை தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்ட பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானில் இருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட, உக்ரைனின் போயிங்-737 என்ற விமானம் தற்செயலாக சுட்டுவீழ்த்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்த நிலையில் இறந்தவர்களில் 57 கனேடியர்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானத்தின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கனேடிய வழக்கறிஞர்கள் தொடர்ந்துள்ள வழக்கில் குறைந்தபட்சம் 1.1 பில்லியன் டொலர் இழப்பீடு கோரப்படுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், விமானம் வேண்டுமென்றே அழிக்கப்பட்டதாகவும், அது ஒரு பயங்கரவாத செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து ஈரான் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.