Reading Time: < 1 minute

உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியைத் தொடர்ந்து, கணினிச் செயலாக்கத் திறனை அதிகரிக்கும் நோக்கில், கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் தனது முதலாவது பிரம்மாண்ட டேட்டா சென்டரை அமைக்கவுள்ளதாக தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது.

Tamil Business Directory

மத்திய அல்பர்ட்டாவின் ஸ்டர்ஜன் கவுண்டியில் அமையவுள்ள இந்த 1-கிகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டர் திட்டத்திற்காக, மெட்டா நிறுவனம் 13 பில்லியன் கனடிய டாலர்களை முதலீடு செய்யவுள்ளது.

மெட்டா நிறுவனம் உலகளவில் அமைக்கும் 33ஆவது டேட்டா சென்டர் இதுவாகும். அல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து கல்கரி நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மெட்டா நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் மெட்டா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் மின்சாரத் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் மிக்க அல்பர்ட்டா மாகாணத்தில், அமெரிக்காவின் சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது. மாகாணத்தின் கடுமையான குளிர் காலநிலை காரணமாக, அங்குள்ள பிரம்மாண்ட சூப்பர் கணினிகள் மற்றும் டேட்டா சென்டர் உள்கட்டமைப்புகளைக் குளிர்விப்பதற்கான செலவு பெருமளவு குறைகிறது.

அல்பர்ட்டாவில் தற்போது இயங்கும் 20 சிறிய மற்றும் நடுத்தர டேட்டா சென்டர்கள் மாகாணத்தின் பொது மின் கட்டமைப்பில் இருந்தே மின்சாரத்தைப் பெறுகின்றன.

எனினும், மாகாண மின் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், புதிய நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும் புதிய உத்தியை மாகாண அரசு அனுமதித்துள்ளது.

இதன்படி, சுமார் 800,000 வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தைப் பயன்படுத்தவுள்ள இந்த டேட்டா சென்டருக்கான புதிய மின் உற்பத்தி மற்றும் கட்டமைப்பு உள்கட்டமைப்புகளுக்கான முழுச் செலவையும் மெட்டா நிறுவனமே ஏற்கும். இதற்காக அல்பர்ட்டாவைச் சேர்ந்த ‘பெம்பினா பைப்லைன்’ நிறுவனத்துடன் மெட்டா கூட்டு சேர்ந்துள்ளது.

இதன் மூலம் ஸ்டர்ஜன் கவுண்டியில் அமைக்கப்படவுள்ள ‘கிரீன்லைட் மின்சார மையம்’ என்ற புதிய இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் 2030ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பயன்பாட்டிற்கு வரும். இந்தத் திட்டத்திற்கு தினசரி சுமார் 150 மில்லியன் கன அடி இயற்கை எரிவாயு தேவைப்படும் என்பதால், இது மேற்கு கனடாவின் இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களுக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தரும்.

கடந்த மாதம் கனடா அரசாங்கம் வெளியிட்ட AI உத்திக் கொள்கையில், புதிய டேட்டா சென்டர்கள் நாட்டின் தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் கட்டமைப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது கனடாவில் திட்டமிடப்பட்டுள்ள பெரும்பான்மையான டேட்டா சென்டர்கள் அல்பர்ட்டா மாகாணத்திலேயே அமையவுள்ளன. இங்கு இயற்கை எரிவாயுவை அதிகமாக நம்பியிருப்பதால், இந்த மாகாணத்தின் மின் கட்டமைப்பு உமிழ்வுத் தீவிரம் நாட்டின் சராசரியை விட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.