Reading Time: < 1 minute

இந்திய இளம்பெண்ணொருவர் கனடாவில் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது ஒரு இளம்பெண்ணால் தாக்கப்பட்டார்.

Tamil Business Directory

இந்த பயங்கர சம்பவம் தொடர்பில், தற்போது 17 வயதுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் வின்னிபெகில் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார் தன்பிரீத் கௌர் (23).

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த தன்பிரீத், திங்கட்கிழமை அதிகாலை பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, யாரோ தன் பின்னால் ஓடிவரும் சத்தம் கேட்டு தன்பிரீத் திரும்பிப் பார்க்க, ஒரு இளம்பெண் தன்பிரீத்தைக் கீழே தள்ளிவிட்டுவிட்டு, அவரது மொபைல் மற்றும் அடையாள அட்டையைக் கேட்டுள்ளார்.

அந்த இளம்பெண்ணுடன் வேறு இரண்டு ஆண்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் தன்பிரீத் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்திருக்கிறார்கள்.

தன்பிரீத் திமிற, அந்தப் பெண் இவரை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். தன்பிரீத்துக்கு, இடுப்பு, வயிறு, இடது கண்ணிமை மற்றும் கை ஆகிய இடங்களில் கத்திக் குத்து விழுந்துள்ளது.

அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து தாக்குதலைத் தடுத்து தன்பிரீத்துக்கு உதவியாக அவசர உதவியை அழைத்துள்ளார்கள்.

தன்பிரீத்தைத் தாக்கிய இளம்பெண், அவரது மொபைல், கிரெடிட் கார்டு மற்றும் அடையாள அட்டையை பறித்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், தன்பிரீத்தைத் தாக்கியதாக 17 வயது இளம்பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

அவர் மீது தாக்குதல், கொள்ளையடித்தல் முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தன்பிரீத்துக்கு பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.