Reading Time: < 1 minute

கனடாவின் ஒண்டாரியோ மாகாணம் மேப்லெட்டன் பகுதியில் இடம்பெற்ற பயங்கர சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

ஒண்டாரியோ மாகாண காவல்துறை தகவலின்படி, வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7:30 மணியளவில், கிச்சனருக்கு வடக்கே உள்ள மேப்லெட்டன் Township பகுதியில், 4th Line மற்றும் Wellington Road 12 சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பயணிகள் வேன் ஒன்றும் SUV ரக வாகனமும் மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் 4 முதல் 12 வயதுக்குள் உள்ள ஐந்து சிறுவர்கள் என OPP உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் விபத்துக்குள்ளான வேனில் பயணித்தவர்கள் என்றும், ஒருவருடன் ஒருவர் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தகவல்களின்படி, உயிரிழந்தவர்களில் நான்கு சிறுமிகளும் ஒரு சிறுவனும் அடங்குவர்.

விபத்தின்போது வேனில் பலர் பயணித்துள்ளனர். உயிர் தப்பிய பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். SUV வாகனத்தில் இருந்த ஓட்டுநரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்ட குடும்பம் எல்மிரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை நம்புகிறது. விபத்துக்கான சரியான காரணம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. விபத்து நடந்த பகுதி பல மணிநேரங்கள் மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயரச் சம்பவத்துக்கு ஒண்டாரியோ முதல்வர் டக் ஃபோர்டு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து ஒண்டாரியோ முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.