கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் மீது, மிரட்டி கப்பம் கோரல் தொடர்பாக மேலும் பல புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமன்ஜீத் சிங் (22), பர்தமன் சிங் (30) ஆகிய இருவருமே கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கிங் ஜார்ஜ் பவுல்வார்ட் மற்றும் 88 அவென்யூ சந்திப்பிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
நள்ளிரவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோது அந்த வீட்டின் உரிமையாளர் உள்ளேதான் இருந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
எனினும், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்பாகவே, அந்த நபர் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலால் குறிவைக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தார் என்று காவல்துறை தெரிவித்தது.
இந்த வழக்கின் விசாரணையை சர்ரே காவல்துறையின் ‘மிரட்டிப் பணம் பறித்தல் தடுப்புப் பிரிவு’ கையில் எடுத்தது.
அவர்கள் சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்றை அடையாளம் கண்டு, சர்ரேயில் உள்ள ஒரு சொத்தை சோதனையிட வாரண்ட் பெற்று, அங்கிருந்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
கடந்த மாதம், இவர்கள் இருவர் மீதும் ‘ஒருவர் இருக்கும் இடம் எனத் தெரிந்தே துப்பாக்கியால் சுட்டது’ மற்றும் ‘உரிமமின்றி தடைசெய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தது’ ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நகரத்தைப் உலுக்கி வரும் இந்த வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குற்றவாளிகளைக் கைது செய்ய உதவும் நம்பகமான தகவல்களை வழங்குவோருக்குப் பரிசு வழங்குவதற்காக, செப்டம்பர் 2025-இல் 250,000 டாலர் மதிப்பிலான ‘சர்ரே எக்ஸ்டார்ஷன் ரிவார்டு ஃபண்ட்’ உருவாக்கப்பட்டு, அது தற்போதும் செயல்பாட்டில் உள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.