அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்திற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானையும் ஒரு அங்கமாகச் சேர்க்க வேண்டும் என்று கனடா அரசு தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.
இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும் எனவும், லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசு அழுத்தம் கொடுத்து வருவதாக கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனானுக்காகக் குரல் கொடுக்கும் பல நாடுகளில் கனடாவும் ஒன்று. இந்த விவகாரம் இறுதியில் அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கு வழங்கும் அனுமதியைப் பொறுத்தே அமையும் என கனேடிய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தம்
ஈரானுடன் எட்டப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. ஒப்பந்தத்தை முன்னின்று நடத்திய பாகிஸ்தான் லெபனான் இதில் உட்படும் என்று கூறினாலும், அமெரிக்காவும் இஸ்ரேலும் இதனை மறுத்து வருகின்றன.
போர்நிறுத்தம் என்பது லெபனானையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் புரிதல்; அதுவே களத்தில் யதார்த்தமாக இருக்க வேண்டும் என பிரதமர் மார்க் கார்னி மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், ஹெஸ்புல்லா அமைப்பினர் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், லெபனானின் இறையாண்மையை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு ஒரு உள்நாட்டுப் போர் உருவாகும் சூழல் இருப்பதாக கனடா கவலை தெரிவித்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.