Reading Time: < 1 minute

பிறர் துயரை உணர்ந்து உதவிக்குத் துடித்த ஒரு நல்ல உள்ளம், எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த சம்பவம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு, ஸ்மிதர்ஸ் அருகிலுள்ள நெடுஞ்சாலையில் இயந்திரக் கோளாறு காரணமாக ஒரு சாம்பல் நிற டிரக் சாலையோரத்தில் நின்றிருந்தது. அந்த வழியாக சென்ற இரண்டு வாகனங்களில் இருந்தவர்கள் மனிதாபிமான அடிப்படையில் டிரக் ஓட்டுநருக்கு உதவ முன்வந்தனர்.

அவர்களில், விட்செட் (Highway 16, near the Wet’suwet’en village of Witset) கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரும், கால்கரி பகுதியைச் சேர்ந்த 45 வயது நபரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி, பழுதான டிரக்கை சரிசெய்ய உதவி செய்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில், மின்னல் வேகத்தில் வந்த கருப்பு நிற செவ்ரோலெட் டாஹோ கார், அங்கு இருந்தவர்களை மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில், உதவிக்காக வந்த 60 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் இருந்த மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருகிறார். விபத்துக்கு காரணமான காரை ஓட்டிய 42 வயது நபரும் கடுமையாக காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை அதிகாரிகள், மது அருந்தி வாகனம் ஓட்டியிருக்கலாம் என்பதே இந்த விபத்திற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

ஒருவர் ஆபத்தில் இருப்பதை அறிந்தவுடன் உதவிக்குத் துரிதமாக சென்ற மனிதரின் உயிர், மற்றொருவரின் பொறுப்பற்ற செயலால் பறிபோனது என்பது இந்த சம்பவத்தின் மிகுந்த வேதனையான அம்சமாகும்.

இந்த துயர சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.