Reading Time: < 1 minute

நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறி சட்டவிரோதமாக மானைக் (Moose) கொன்ற அமெரிக்கருக்கு சுமார் 29,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஒன்ராறியோவில் வேட்டையாட 10 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த லாரி சூரா (Larry Szura), கடந்த 2023 செப்டம்பர் 29 அன்று ஒன்ராறியோவின் பிக்கிள் ஏரி (Pickle Lake) அருகே ஒரு மானைச் சுட்டுக் கொன்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நடந்த விசாரணையில், அவர் முறையான உரிமம் இன்றி வேட்டையாடியதும், பொதுப் போக்குவரத்துப் பாதையில் துப்பாக்கியால் சுட்டதும் உறுதியானது.

லாரி சூராவிடம் பெண் மானை வேட்டையாடுவதற்கான முறையான உரிமச் சீட்டு (Tag) இல்லை. அவர் ஒரு சக்திவாய்ந்த துப்பாக்கியைப் பயன்படுத்திச் சாலையின் நடுவே நின்று மானைச் சுட்டுள்ளார்.

மானைக் கொன்ற பிறகு, சுமார் 13 கி.மீ தொலைவிலிருந்த தனது நண்பரிடம் சென்று, நடந்த உண்மையை மறைத்து, அந்த நண்பரின் உரிமச் சீட்டைப் பயன்படுத்தி மானைச் சட்டப்பூர்வமாகக் கொன்றது போல் காட்ட முயன்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, லாரி சூரா உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறி அடுத்த நாள் காலையிலேயே அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த டிரைடன் (Dryden) நீதிமன்றம், லாரி சூராவுக்கு 28,750 டாலர் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.

அத்துடன், ஒன்ராறியோ மாகாணத்தில் அவர் வேட்டையாடுவதற்கான உரிமத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பறிமுதல் செய்து உத்தரவிட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு இது ஒரு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக ஒன்ராறியோ இயற்கை வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.