கனடாவின் மேற்கு நகரமான வான்கூவரில் நடந்த ஒரு திறந்த வெளி நிகழ்வின் போது, நபரொருவர் தான் பயணித்த வாகனத்தை கூட்டத்திற்குள் வேகமாக செலுத்தி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கனடாவின் வான்கூவார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. லாபு லாபு தின நிகழ்வுகளுக்காக குழுமியிருந்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நிகழ்வு ஒன்றில் குழுமியிருந்த மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் சாட்சியங்களை மேற்கொள்காட்டு குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது.
எனினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இன்னும் உறுதிப்படுத்தாத வான்கூவர் பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் கூட்டத்தின் வழியாக ஒரு கருப்பு SUV வாகனம் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்தியதாக சாட்சிகள் விவரிக்கின்றனர்.
என்ன நடந்தது என்பது குறித்து வான்கூவர் பொலிஸார் எந்த விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
ஆனால் கிழக்கு 41வது அவென்யூ மற்றும் ஃப்ரேசர் தெருவில் இரவு 8 மணிக்குப் பின்னர் ஒரு சாரதி கூட்டத்திற்குள் வாகனத்தை ஓட்டிச் சென்றதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.




