கனடாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வின் காரணமாக, அத்தியாவசிய மளிகைப் பொருட்களை குறைந்த விலையில் வாங்கும் நோக்கில் பல கனேடியர்கள் தற்போது தள்ளுபடிக் கடைகளை நாடத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு காலத்தில் பொருட்களின் “Best Before” அல்லது காலாவதி திகதியை மிகுந்த கவனத்துடன் பார்த்து வாங்கும் பழக்கமுடையவர்களாக கனேடியர்கள் கருதப்பட்டனர். ஆனால் தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக, அந்த திகதி நெருங்கியிருந்தாலும் அல்லது கடந்திருந்தாலும், குறைந்த விலையில் கிடைத்தால் வாங்கிப் பயன்படுத்தலாம் என்ற மனப்பான்மை பலரிடையே உருவாகியுள்ளது.
குறிப்பாக மளிகைப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், எந்த இடத்தில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன என்பதை ஆராய்ந்து வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.
கனடாவில் செயல்பட்டு வரும் “Liquidation Marie” போன்ற தள்ளுபடிக் கடைகளில், பல பொருட்கள் 50 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக, இத்தகைய கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தேவை அதிகரித்துள்ளதால், கனடாவின் பல பகுதிகளில் தள்ளுபடிக் கடைகளின் புதிய கிளைகளும் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரமற்றவை அல்ல என்றும் வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரிய பல்பொருள் அங்காடிகள் தங்களின் தேவையை விட அதிகமாக வாங்கிய பொருட்கள் அல்லது “Best Before” திகதி நெருங்கிய பொருட்களை தள்ளுபடி விலையில் இந்த கடைகளுக்கு வழங்குகின்றன. பின்னர் அவை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
பொருளாதார அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக கனேடியர்கள் புதிய கொள்முதல் பழக்கங்களுக்கு மாறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.