Reading Time: < 1 minute

கனடாவின் வடமேற்கு ஒன்றாரியோ பகுதியில் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட மாதாந்த கொடுப்பனவுகளை செலுத்துவதா அல்லது உணவு கொள்வனவு செய்வதா என்ற நெருக்கடியை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

அண்மையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த நேர்காணலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

போதியளவு வருமானம் இல்லாத காரணத்தினால் மக்கள் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்டணங்களை செலுத்தாவிட்டால் வீட்டை இழக்க நேரிடும் எனவும், கட்டணங்களை செலுத்தினால் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை உருவாகும் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வடமேற்கு ஒன்றாரியோ மக்கள் மத்தியில் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், தன்டர்பே பகுதியில் நான்கு பேரைக் கொண்டு குடும்பம் ஒன்றின் மாதாந்த உணவுச் செலவு 1200 டொலர்களாக காணப்பட்டது.

இது அதற்கு முந்தைய 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 15 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.