Reading Time: < 1 minute

இலங்கையிலிருந்து பலகுழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய எல்லையிலுள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதே எண்ணிக்கையலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னையும் 33 இலங்கையர்களையும் ரொஸ்டொவ்வில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு 14 நாட்கள் பயிற்சி அளித்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் அந்த முகாமிலிருந்தவேளை 70 இலங்கையர்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பில் நாளாந்தம் பத்து அல்லது 15 சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுவதாகவும், அவை ஒரு வாரத்திற்குள் கடவுச்சீட்டு விசாவுடன் கிடைப்பதாக தெரிவித்த தெரிவித்த தப்பி வந்த முன்னாள் படைவீரர், அடுத்த சில நாட்களில் அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகளே, தன்னை ரஷ்ய உக்ரைன் போர்முனையில் பணியாற்ற தெரிவு செய்ததாக குறித்த நபர் தெரிவித்தார்.

அதற்காக 1.6 மில்லியன் செலுத்தியதாகவும் முகாமில் உதவியாளராக பணியாற்றும் வேலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரஜையான ரமேஸ் என்பவரே இந்த நடவடிக்கைகளின் சூத்திரதாரி என தெரிவித்துள்ள முன்னாள் படை வீரர், ரஷ்யாவில் தமிழில் பேசிய ஒருவரே தங்களை வரவேற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாபயணிகளுக்கான விசாவில் செல்லும் இலங்கையர்களை வாக்னெர் கூலிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்காக ரஷ்ய மொழி ஆவணமொன்றில் கைச்சாத்திடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என குறித்த முன்னாள் படைவீரர் தெரிவித்துள்ளார்.

இதற்கு, சட்டத்தரணி போன்று தோற்றமளித்த இந்திய பெண் ஒருவர் தங்களிற்கு உதவியதாகவும், அவர் முகாம் உதவியாளராக பணிபுரிவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தம் என தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கியுபா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு கூலிப்படையினர் காணப்படுகின்றனர். ரஷ்ய உக்ரைன் போர்களங்களிற்கு ஆட்களை சேர்ப்பது கடந்த மூன்று மாதங்களில் தீவிரமடைந்துள்ளது. கடந்த வருடம் ஒவ்வொரு மாதமும் மூன்றுபேர் அல்லது நான்கு பேரே சேர்க்கப்பட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.