நாட்டில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களிற்கு மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு குற்றம் சுமத்தியுள்ளார்.
பிணைச் சட்டங்களைக் (Bail Laws) கடுமையாக்குவதற்கான மத்திய அரசின் சட்ட மசோதா தாமதமாவது குறித்து தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
திங்கள்கிழமை டொராண்டோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டக் ஃபோர்டு, குற்றவாளிகளுக்குப் பிணை வழங்குவதில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று அனைத்து மாகாண முதல்வர்களும் ஒருமித்த கருத்துடன் கையெழுத்திட்டு ஓராண்டுக்கு மேலாகியும், மத்திய அரசு இன்னும் மெத்தனமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
“மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அத்துமீறுபவர்களாலும், கார் திருட்டுகளாலும் சலிப்படைந்துள்ளனர். வெளியில் செல்லும்போது தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் காலதாமதம் செய்கிறது,” என்று அவர் கூறினார்.
மத்திய அரசு கடந்த அக்டோபரில் பிணைச் சட்ட சீர்திருத்தங்களை அறிவித்த போதிலும், அந்த மசோதா இன்னும் செனட் சபையின் பரிசீலனையிலேயே இருந்து வருகிறது. அதே செய்தியாளர் சந்திப்பில், ஒன்டாரியோ சிறைச்சாலைகளிலிருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட கைதிகள் குறித்த கேள்விகளுக்கும் முதல்வர் பதிலளித்தார்.
ஒன்டாரியோ சிறைச்சாலைகளிலிருந்து நடைமுறைத் தவறுகள் காரணமாகத் தவறுதலாக விடுவிக்கப்பட்டவர்களில் 5 கைதிகள் இன்னும் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர்.
நீதிமன்றங்களில் ஏற்படும் நிர்வாக பிழைகள் காரணமாக ஒரு கைதி தப்பிப்பதைக்கூட ஏற்க முடியாது என்று ஃபோர்டு தெரிவித்தார். கைதிகளைக் கண்காணிக்க நவீன தொழில்நுட்பம் மற்றும் கூடுதல் சிறை அதிகாரிகளைப் பணியமர்த்துவதன் மூலம் இத்தகைய தவறுகள் இனி நடக்காமல் தடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் கெர்ஸ்னர் உறுதியளித்தார்.
அண்மையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (FOI) படி, 2021 முதல் ஒன்டாரியோ மாகாணச் சிறை அமைப்பிலிருந்து 150-க்கும் மேற்பட்ட கைதிகள் முறையற்ற முறையில் விடுவிக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
தலைமறைவாக உள்ள ஐந்து கைதிகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏதேனும் இருந்தால், காவல்துறை உடனடியாக அறிவிப்பு வெளியிடும் என்றும், அதுவரை மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் கெர்ஸ்னர் விளக்கமளித்துள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.