Reading Time: < 1 minute

பிறக்கவிருக்கும் புத்தாண்டில் கனடாவில் குடியிருப்புகளின் விலை சரிவடைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாடகைதாரர்கள் தொடர்பில் பேரிடியான தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் குடியிருப்புகளின் விலையில் சரிவு காணப்படும் என சந்தை தொடர்பான ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஆனால், 2022 போன்று வாடகை கட்டணங்கள் மேலும் இறுக்கமடையும் என்றே நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கனடாவிலேயே இரண்டாவதாக மிக அதிகம் வாடகை வசூலிக்கப்படும் பகுதி ரொறன்ரோ. இங்கு ஒற்றை படுக்கையறை கொண்ட வீட்டுக்கு சராசரியாக இந்த டிசம்பரில் 2,551 டொலர் வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22.5% வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டுக்கு 3,363 டொலர் வசூலிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.5% அதிகரிப்பு எனவும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், வாடகை குடியிருப்புகளுக்கு கனடாவில் தேவை மேலும் அதிகரித்துள்ளதாகவே கூறுகின்றனர். ஆனால் 2023ல் வாடகை கட்டணங்கள் இதைவிட மிக மோசமாக இருக்கப் போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

விலைவாசி உயர்வு காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளின் முன்விற்பனை சரிவடைந்துள்ளதும், அல்லது ரத்தானதும், இதுபோன்ற திட்டங்கள் செயலில் இல்லாததும் வாடகைதாரர்களுக்கு புத்தாண்டில் பேரிடியாக அமையும் என்றே கூறுகின்றனர்.