Reading Time: < 1 minute

கனடாவின் மொன்றியலில் பல்லின மக்கள் வாழும் பகுதியில், இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பிரிவினர் சிலரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இனவெறி மற்றும் இழிவான செயல்களைத் தொடர்ந்து, அங்கு பாரிய அளவிலான சுயாதீன விசாரணைக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

Tamil Business Directory

கியூபெக் மாகாணம் முழுவதும் வாழும் கறுப்பின இளைஞர்களுக்காகக் குரல் கொடுக்கும் சமூகத் தலைவர்கள், பொலிஸார் மீதான நம்பிக்கை முற்றாக உடைந்துள்ளதாகவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த சுயாதீன விசாரணை மட்டுமே ஒரே வழி என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மொன்றியல்-நோர்த் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல என்றும், இது பொலிஸ் கட்டமைப்பிற்குள் பரவியுள்ள ஒரு நோய் என்றும் ‘அப்ரோ இளைஞர் மாநாட்டின்’ துணைத் தலைவர் அலைக்ஸ் அட்ரியன் தெரிவித்துள்ளார்.

மேலும், மொன்றியலுக்குத் தெற்கே உள்ள லோங்குயில் பொலிஸ் உட்பட, கியூபெக் மாகாணத்தில் இனவெறி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக இந்த விசாரணை அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் வேறு எங்கும் நடக்கவில்லை என்பதற்கு யார் உத்தரவாதம் அளிக்க முடியும் என அப்ரோ இளைஞர் மாநாட்டின் தலைவர் எடுவார்ட் ஸ்டாக்கோ கேள்வி எழுப்பியுள்ளார்.

சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சிறுபான்மையின மக்களை இலக்கு வைக்குமாறு பிறரை ஊக்குவித்ததாகவும், கைது செய்யப்பட்ட சிலரின் தலைமுடியை வெட்டி அதனைத் தங்களின் ‘வெற்றிக் சின்னங்களாக’ வைத்திருக்க முயன்றதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் மொன்றியல் பொலிஸ் மா அதிபர் ஃபாடி டகர் அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, சக பொலிஸ் அதிகாரிகளே இந்த அநீதியை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மொன்றியல்-நோர்த் பகுதியில் உள்ள 39ஆம் இலக்க பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 16 அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.