கையில் இருந்த சேமிப்புப் பணத்தை முழுவதும் செலவழித்தும், கடன் வாங்கியும் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது சாதாரண விஷயமாகிவிட்டது. பிள்ளைகள் நல்ல படிப்பு முடித்து சிறந்த வேலையில் அமர்ந்து குடும்பத்தை முன்னேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் சொத்துக்களையும் விற்று அனுப்புகின்றனர்.
ஆனால், அந்தப் பிள்ளை சடலமாகத் தான் தாய்நாட்டுக்குத் திரும்பப்போகிறான் என்ற செய்தி வந்தால், அந்தக் குடும்பம் அனுபவிக்கும் வேதனை சொல்லி முடிக்க முடியாதது.
அப்படிப்பட்ட ஒரு துயர நிலை தற்போது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ளது. குர்கிரத் சிங் மனோசா (26) என்பவர் மேல்படிப்புக்காக Canada சென்றிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மர்ம கும்பல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த அவர், Northern Lights College கல்லூரியில் முதுகலைப் பட்டயப்படிப்பு பயின்று வந்தார். படிப்புடன் சேர்த்து, Walmart பல்பொருள் அங்காடியில் பகுதி நேர வேலை செய்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் 14ஆம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, 10 முதல் 12 பேர் வரை கொண்ட குழு அவரை கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலின் போது அவர்மீது வாகனம் ஒன்றையும் ஏற்றிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சேரும் முன்பே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்கனவே பொருளாதார சிரமத்தில் இருந்த அவரது குடும்பம், தற்போது அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல தேவையான செலவுகளையும் ஏற்க முடியாமல் தவித்து வருகிறது.
15 மாதங்களுக்கு முன்தான் கனடாவுக்கு சென்றிருந்த மகன் படித்து முடித்து நல்ல வேலையில் அமர்ந்து குடும்பத்தை முன்னேற்றுவான் என்ற நம்பிக்கையில் இருந்த பெற்றோர், இப்போது இந்த துயர செய்தியை ஏற்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.




