வினிபெக் நகரில் பருவவயதை அடையாத சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு வினிபெக் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மெனிடுாபா அவென்யூவின் 400 வது தொகுதிப் பகுதியில் அச்சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தில் வந்த நபர் ஒருவர் அவரை நெருங்கியுள்ளார்.
போதைப்பொருள் மற்றும் மதுபானம் தருவதாக ஆசைவார்த்தை கூறி, அச்சிறுமியை அந்த நபர் தனது வாகனத்திற்குள் அழைத்துள்ளார்.
சிறுமி வாகனத்தினுள் ஏறியதும், அந்த சந்தேக நபர் அருகில் உள்ள ஒரு நடமாட்டமற்ற பகுதிக்கு வாகனத்தைச் செலுத்தி, கத்தி முனையில் சிறுமியை மிரட்டி கொடூரமான பாலியல் வன்புணர்வை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கோர சம்பவத்தின் பின்னர், அங்கிருந்து தப்பிய சிறுமி அருகில் உள்ள தனது குடும்ப உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு ஓடிச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்தே பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வினிபெக் பொலிஸாரின் குழந்தைகள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு பொறுப்பேற்றுள்ளதுடன், சந்தேக நபரை அடையாளம் காணப் பின்வரும் விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது சந்தேக நபர் நான்கு கதவுகள் கொண்ட, பழுப்பு நிற (Brown-coloured) செடான் (Sedan) ரக கார் ஒன்றை ஓட்டிச் சென்றுள்ளார். சந்தேக நபர் 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், குட்டையான கறுப்புத் தலைமுடி மற்றும் மீசையைக் கொண்டவர் எனவும் விவரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடந்த நேரத்தில் எடுக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா, கைபேசி அல்லது வாகன டேஷ்கேம் காட்சிகளைக் கொண்டிருப்பவர்கள் அல்லது இது குறித்து ஏதேனும் தகவல் அறிந்தவர்கள், உடனடியாக குழந்தைகள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு புலனாய்வாளர்களை 204-986-3296 என்ற இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
தங்களது விபரங்களை இரகசியமாகப் பேண விரும்புவோர், ‘வினிபெக் குற்றத் தடுப்புப் பிரிவை’ 204-786-8477 (TIPS) என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது இணையத்தளம் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.