கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள கார்டன் ரிவர் பழங்குடியினப் பகுதியில், கஞ்சா புகைப்பதாக நினைத்து வீரியமிக்க போதைப்பொருள் கலந்த கலவையைப் பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் இதேபோன்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனிஷினாபெக் காவல்துறை எச்சரித்துள்ளது.
கடந்த வார இறுதியில் இந்த இரண்டு அதிர்ச்சிகரமான சம்பவங்களும் நடந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் கஞ்சா விற்பனை நிலையத்தில் இருந்து வாங்கப்பட்ட கஞ்சாவையே பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, கார்டன் ரிவர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் சில இளைஞர்கள் இணைந்து, ‘பாங்’ எனப்படும் புகைபிடிக்கும் கருவி மூலம் கஞ்சா புகைத்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு இளைஞருக்கு போதை தலைக்கேறி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த அந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது. அவருடன் புகைபிடித்த மற்றவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கடுத்ததாக நடந்த இரண்டாவது சம்பவத்திலும், ஒரு குழுவினர் கஞ்சா என நினைத்து அதேபோன்று புகைத்துள்ளனர்.
அதில் ஒரு சிறுவனுக்கு கடுமையான வலிப்பு (Seizures) மற்றும் போதை அதிகரித்ததற்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அச்சிறுவன் இன்னமும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுன்றது.
இந்த விவகாரம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.