Reading Time: < 1 minute

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக உள்ளநிலையில், உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீத எண்ணெய் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து 40 புள்ளி உலகளாவிய பணவீக்கம் ஏற்படுமென சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நிதியமைச்சின் அனுசரணையுடன் நடந்த கருத்தரங்கிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதற்கும் தயாராக இருக்குமாறு கொள்கை வகுப்பாளர்களுக்கு எனது ஆலோசனைகளை தெரிவித்துள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதால் மசகு எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 112.98 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதேபோல் டபிள்யூ.டி.ஐ ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்று 110.17 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,இது குறித்து விவாதிக்க G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விலை உயர்வுக்குத் தீர்வாக, அவசரகால எரிபொருள் இருப்புகளை சந்தையில் வெளியிடும் முன்மொழிவு குறித்து அவர்கள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முன்மொழிவுக்கு அமெரிக்கா ஏற்கனவே தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் G7 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்தச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாயர் ஒன்றின் விலை 117.65 அமெரிக்க டொலரில் இருந்து 104 டொலராக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.