Reading Time: < 1 minute

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2026-ஆம் ஆண்டு ஃபிபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நெருங்கி வரும் நிலையில், போலி டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிட முன்பதிவு மோசடிகள் குறித்து கனடிய மோசடி தடுப்பு மையம் (CAFC) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tamil Business Directory

கனடிய பொலிஸார் இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

கால்பந்து ரசிகர்கள் தங்குமிடம் மற்றும் டிக்கெட்டுகளுக்காகக் காட்டும் ஆர்வத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மோசடி கும்பல்கள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, சமூக வலைதளங்கள் மூலம் மலிவான விலையில் டிக்கெட்டுகளை விற்பதாகக் கூறி முன்பணம் பெற்று ஏமாற்றுவது மற்றும் இல்லாத தங்குமிடங்களை இருப்பது போலக் காட்டி வாடகை வசூலிப்பது போன்ற புகார்கள் அதிகரித்துள்ளன.

இதற்கு உதாரணமாக, ஒன்ராறியோவைச் சேர்ந்த அடோனிஸ் இப்ராஹிம் என்ற ரசிகர், பேஸ்புக் மார்க்கெட்பிளேஸ் வழியாக ஒரு டிக்கெட்டை வாங்க முயன்று 400 டொலர்களை இழந்து ஏமாற்றப்பட்டுள்ளார்.

இத்தகைய மோசடிகளில் இருந்து தப்பிக்க, ரசிகர்கள் ஃபிபாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சரிபார்க்கப்பட்ட பரிமாற்றத் தளங்களை (Verified Exchange Platforms) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

மேலும், தங்குமிடங்களை முன்பதிவு செய்யும் போது சந்தை விலையை விட மிகக் குறைவாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஆன்லைன் பரிமாற்றங்களுக்கு மோசடி பாதுகாப்பு கொண்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜூன் 12-ஆம் திகதி போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், எட்மண்டன் மற்றும் மாண்ட்ரியல் ஆகிய இடங்களில் நடைபெறும் பயிற்சி ஆட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ டிக்கெட்டுகள் இன்னும் விற்பனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.