Reading Time: < 1 minute

ஆல்பர்ட்டா மாகாணத்தில் கட்டாய கொரோனா தடுப்பூசி கொள்கைக்கு எதிராக நான்கு மருத்துவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். மேலும், தங்களின் நிலைப்பாட்டை அறிக்கை ஒன்றின் மூலம் கலகரி நீதிமன்றத்தில் குறித்த நான்கு மருத்துவர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஒரு நோயாளியின் முன்அனுமதியின்றி செய்யப்படும் எந்தவொரு மருத்துவ சிகிச்சையும் அவர்கள் மீதான தாக்குதலுக்கு சமம் என்றே குறித்த நான்கு மருத்துவர்களும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆல்பர்ட்டா சுகாதார சேவையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பொதுமக்களின் நலன் கருதி கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது மாகாண சுகாதாரத்துறையின் கொள்கையாகும்.

மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ள காலக்கெடுவும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே கல்கரி மருத்துவர்கள் நால்வரும் குறித்த கட்டாய கொள்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆல்பர்ட்டா சுகாதார சேவை மையத்தில் பணியாற்றும் முழு நேர மற்றும் பாதி நேர ஊழியர்கள் 94 சதவீதத்தினரும் 94 சதவீத மருத்துவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், கட்டாய தடுப்பூசி கொள்கையால் இதுவரை 61 ஊழியர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதில் 11 பேர்கள் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் என தெரிய வந்துள்ளது.