Reading Time: < 1 minute

அவுஸ்ரேலியாவுக்கு அகதியாகச் சென்று தீவொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளம் தம்பதிக்கு கனடா அடைக்கலம் வழங்கியுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்பு டிமா என்ற பாலஸ்தீனியப் பெண் அகதி, பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானார். ஹானி என்பவருடன் அவுஸ்ரேலியா செல்ல முடிவெடுத்த டிமா படகுப் பயணம் மூலம் அவரது கணவருடன் சென்றநிலையில் நாயுறு தீவில் சிறை வைக்கப்பட்டார்கள்.

இதன்போது,  கர்ப்பமுற்றிருந்த அவர் பல இன்னல்களுக்கு மத்தியில் வைத்தியசாலை செல்வதற்காக தனியாக டிமாவுக்கு மட்டும் அவுஸ்ரேலியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், கணவர் ஒருபக்கம் தனித்து இருந்த இளம் குடும்பத்துக்கு கனடா அரசாங்கம் அடைக்கலம் கொடுத்தது.

கனடா அரசாங்கத்தின் குடியுரிமைத் திட்டம் ஒன்றின்கீழ் டிமா, அவரது கணவர் ஹானி மற்றும் தம்பதியின் குழந்தை முகமது ஆகியோர் கனடாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

வாழ்வு என்னாகுமோ என்று கலங்கிநின்ற குடும்பத்திற்கு கனடா வாழ்வளித்திருக்கிறது. தற்போது கனடாவில் ரொரன்றோவில் டிமா குடும்பத்திற்கு நிரந்தர வாழிட உரிமை வழங்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவுஸ்ரேலியாவில் மகனுடன் தவித்த டிமாவும், தனியாக சிறையில் வாடிய ஹானியும் கனடாவில் இணைந்திருக்கிறார்கள்.

அத்துடன், அவர்கள் தங்களுக்கென ஒரு வேலையைத் தேடிக்கொள்ளும் வரையில், அவர்களை கனடாவுக்கு ஸ்பொன்சர் செய்தவர்கள் குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கிவருகின்றனர்.