Reading Time: < 1 minute

கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொன்றியலில் மக்கள் தொகை வளர்ச்சி மந்தமடைந்து, எதிர்காலத்தில் வீழ்ச்சியடையும் அபாயம் உருவாகியுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

Tamil Business Directory

‘Observatoire Grand Montréal’ அமைப்பின் அண்மைய ஆய்வின்படி, Greater Montreal பகுதி 4.3 மில்லியன் மக்கள் தொகையை கடந்திருந்தாலும், அதற்கு பின்னால் வேகமாக அதிகரிக்கும் முதியோர் மக்கள் தொகை மற்றும் குறைவான குடியேற்ற வளர்ச்சி போன்ற சவால்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அறிக்கையின் கணிப்புப்படி, 2025ஆம் ஆண்டு சுமார் 43 லட்சமாக இருந்த மொன்றியலின் மக்கள் தொகை, 2050ஆம் ஆண்டுக்குள் 1.3 சதவீதம் வரை குறையக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் டொராண்டோவின் மக்கள் தொகை 14.6 சதவீதமும், வான்கூவரின் மக்கள் தொகை 21.9 சதவீதமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக, மொன்றியலில் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதேநேரத்தில், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 2.9 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதனால், மொன்றியலில் வேலைவாய்ப்பு சந்தை மற்றும் பொது நிதித்துறைக்கு பெரும் அழுத்தம் உருவாகும் அபாயம் உள்ளது. வரி செலுத்தும் உழைக்கும் வயது மக்களின் எண்ணிக்கை குறையும் நிலையில், ஓய்வூதியம், சுகாதாரம், சமூக சேவைகள் போன்றவற்றுக்கான தேவை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2006 முதல் 2025 வரை, மொன்றியலில் உழைக்கும் வயது மக்களின் வளர்ச்சி 0.7 சதவீதமாக இருந்த நிலையில், அவர்களைச் சார்ந்து வாழும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் போன்றோரின் வளர்ச்சி 1.4 சதவீதமாக இருந்துள்ளது. இதன் விளைவாக, 2050ஆம் ஆண்டுக்குள் மொன்றியலின் சார்பு விகிதம் 74.7 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது டொராண்டோவின் 64 சதவீதத்தையும், வான்கூவரின் 61 சதவீதத்தையும் விட அதிகமாகும்.

கனடாவின் பிற பெரிய நகரங்கள் குடியேற்றம் மற்றும் இளைய தலைமுறை வளர்ச்சியால் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், மொன்றியல் எதிர்கொள்ளும் இந்த மக்கள் தொகை மாற்றம், நகரின் பொருளாதாரம், வீட்டு வசதி, சுகாதார சேவைகள் மற்றும் எதிர்கால திட்டமிடல் ஆகிய துறைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பதால், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளுக்கு அருகில் அமைந்த சிறிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் senior-friendly housing தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.