Reading Time: < 1 minute

வன்கூவர் தீவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கப்ரியலா தீவில் இடம்பெற்ற விமான விபத்தில், மூவர் உயிரிழந்துள்ளதனை ‘நாவ் கனடா’வின் ஆரம்ப அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

நானாயிமோ விமான நிலையத்திற்கு ‘உபகரணங்கள் பிரச்சினை’ குறித்த அறிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இவ்விபத்தில் 61 வயதான விமானி, பயிற்றுவிப்பாளர் அலெக்ஸ் பல்சென் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஒரு ஆணும் பெண்ணும் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தனியுரிமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்படாது என கூறப்படுகின்றது.

மேலும், விமானம் எத்தகைய சக்தியால் தரையில் மோதியது என்பது குறித்த, விமானத்தின் பதிவை சரிபார்க்க கூட புலனாய்வாளர்கள் சிரமப்படுவதாக, போக்குவரத்து பாதுகாப்பு சபை (டி.எஸ்.பி) தெரிவித்துள்ளது.

விமானம் தரையிறங்குவதற்கு முன்பு ஒருவித இயந்திர அல்லது தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்ததாக ஆதாரங்கள் தெரிவிப்பதாக விமான நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6:10 அளவில், கப்ரியலா தீவின் வடமேற்கு மூலையில், பைபர் ஏரோஸ்ரார் என்ற இரட்டை எஞ்சின் புரொப்பெல்லர் விமானம் விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.