Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலையில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

இந்தத் தாக்குதலில் சந்தேகநபர் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிப் பிரயோகம்

டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள குறித்த பாடசாலைக்குள் நேற்று மதியம் புகுந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தினர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் பழுப்பு நிற முடி மற்றும் ஆடை அணிந்திருந்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

பாடசாலைத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்றுமொரு சம்பவம் அருகில் உள்ள வீடொன்றிலும் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்தும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர் மற்றும் அம்பியுலன்ஸ் மூலம் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கனடா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.