Reading Time: < 1 minute

கனடாவின் க்யூபெக்கின் வடகிழக்கு பகுதியில் உள்ள நடாஷ்குவான் பகுதியில், மருத்துவ அவசர போக்குவரத்துக்காக பறந்த எயர் மெடிக் ஹெலிகாப்டர் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு ஏரியில் விழுந்துள்ளது.

Tamil Business Directory

இந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்த நால்வர் காணாமல் போயுள்ளனர். விபத்து வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் இடம்பெற்றதாக கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (TSB) பேச்சாளர் நிக் டெஃபால்கோ தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டர் ஒருவரை மருத்துவ அவசர நிலை காரணமாக ஏற்றிக்கொண்டு புறப்பட்டிருந்தபோது, புறப்பட்ட சில நிமிடங்களில் ஏரியில் விழுந்ததாக TSB கூறியுள்ளது.

ஹெலிகாப்டரில் நான்கு ஊழியர்களும், ஒரு பயணியும் இருந்ததாக எயர் மெடிக் நிறுவனத்தின் பேச்சாளர் ரபாயல் போர்கால்ட் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளானவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தில்லை என கூறப்படும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் ஏனைய நான்கு பேரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே போலீசாரும், தரை மற்றும் நீர்வழி தேடுதல் குழுக்களும் நால்வருக்கான தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து க்யூபெக் மாகாண பொலிஸாரும், போக்குவரத்துச் சபையும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.