Reading Time: < 1 minute

கனடாவின் மொன்றியலில் நடைபெற உள்ள இடைத்தேர்தல், கனடா அரசில் கவனம் ஈர்த்துவருகிறது.

Tamil Business Directory

கனடாவின் Toronto-St. Paul’s தொகுதியில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது.

கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான Don Stewart, லிபரல் கட்சியின் கோட்டை என கருதப்படும் அத்தொகுதியிலேயே, லிபரல் கட்சி வேட்பாளரான Leslie Church என்பவரை 590 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார்.

Don Stewartஇன் வெற்றி, லிபரல் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. காரணம், 30 ஆண்டுகளாக அத்தொகுதி லிபரல் வசம் இருந்த நிலையில், தற்போது, கன்சர்வேட்டிவ் கட்சியினர் Toronto-St. Paul’s தொகுதியக் கைப்பற்றியுள்ளார்கள்.

ஆகவே, கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும், ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என அவரது கட்சிக்குள்ளேயே குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத லிபரல் கட்சியினர் சிலர் கூறியிருந்தார்கள்.

இந்நிலையில், கனடாவின் மொன்றியல் தொகுதியில் இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அந்த இடைத்தேர்தல் கனடா அரசில் கவனம் ஈர்த்துவருகிறது. காரணம், அந்த தேர்தலில் ட்ரூடோ கட்சி தோல்வியடையுமானால், மக்கள் ஆட்சி மாற்றம் தேவை, அதாவது, ட்ரூடோவை வீட்டுக்குப் போகச் சொல்வதாக பொருள் என்னும் ரீதியில் அந்த தேர்தல் பார்க்கப்படுவதால், அந்த தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்கப்படுகின்றன.