அடுத்த வாரம் கனடா பயணிக்கும் மன்னர் சார்லஸ், கனடா நாடாளுமன்றத்தைத் துவக்கிவைக்க இருக்கிறார்.
சுமார் 67 ஆண்டுகளுக்குப்பின், மன்னர் சார்லஸ் கனடா நாடாளுமன்றத்தைத் துவக்கிவைக்க இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
அதாவது, அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், மன்னரின் ஆட்சியின் கீழிருக்கும் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக வெளிப்படையாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், கனடா இன்னமும் மன்னரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கனடா விற்பனைக்கு அல்ல என்பதை ட்ரம்புக்கு சொல்லாமல் சொல்வதற்காகவே மன்னர் சார்லஸ் கனடா வருவதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், மன்னர் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடாவுக்கான அமெரிக்க தூதரான பீற் (Pete Hoekstra), அதற்கு மன்னர் எதற்கு? கனடா பிரதமரே போதுமே என்கிறார்.
அதாவது, மன்னர் சார்லஸ் கனடா வருவதை நாங்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஆனால், கனடா வரும் மன்னரின் நோக்கம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு ஒரு செய்தியைச் சொல்வதற்காக என்றால், அதற்கு மன்னர் எதற்கு, கனடா பிரதமரான மார்க் கார்னியே போதுமே என்கிறார் பீற்.
ட்ரம்புக்கு செய்தி ஒன்றைச் சொல்வதற்காகவே மன்னர் கனடாவுக்கு வருகிறார் என்றால், செய்தி அனுப்புவதற்கு எளிமையான வழிகள் உள்ளன என்கிறார் பீற்.
மார்க் கார்னி என்னிடம் தொலைபேசியில் பேசலாம். அவர் எப்போது வேண்டுமானாலும் ட்ரம்பிடம் பேசலாம் என்று கூறியுள்ளார் பீற்.
இன்னொரு விடயம், இப்போது எங்களுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை என்றும் கூறியுள்ளார் பீற்.
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து கனேடியர்கள் பேச விரும்பினால் அது அவர்கள் விருப்பம்.
எனக்கு அதைக் குறித்து பேச நேரமில்லை என்று கூறும் பீற், ட்ரம்பும் அதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கவில்லை, எங்களுக்கு வேறு நிறைய வேலைகள் உள்ளன.
நாங்கள் அமெரிக்காவின் செழிப்பையும், பாதுகாப்பையும் அதிகரிப்பதில் கவனம் செலுத்திவருகிறோம் என்றும் கூறியுள்ளார் பீற்.




