Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், மேப்லெட்டன் டவுன்ஷிப்பில் கடந்த 12 அன்று நிகழ்ந்த பயங்கர வாகன விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரம்டனைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

இதன் மூலம் இந்த விபத்தில் பலியானோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தில் பலியான 5 குழந்தைகளின் இறுதிச் சடங்கிற்காகக் குடும்பத்தினரும் சமூகத்தினரும் கூடி அஞ்சலி செலுத்தி வரும் வேளையில் இந்தத் துயர செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் 12 ஆம் திகதி இரவு சுமார் 7:30 மணியளவில், மேப்லெட்டன் டவுன்ஷிப்பில் உள்ள ‘4த் லைன் மற்றும் வெல்லிங்டன் ரோடு 12’ சந்திப்பில், 10 பேர் பயணித்த பயணிகள் வேன் ஒன்றும், எஸ்யூவி ரக கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த கொடூர விபத்தில், வேனில் இருந்த குழந்தைகளில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்த ஐந்து குழந்தைகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ‘டோர்சென்’ குடும்ப உடன்பிறப்புகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை பிற்பகல் ஒன்டாரியோவின் மில்வெர்டன் பகுதியில் நடைபெற்றன. வேனில் இருந்த ஒரு கைக்குழந்தை உட்பட மற்ற 5 பேர் காயங்களுடன் தப்பினர்.

விபத்துக்குள்ளான எஸ்யூவி காரை ஓட்டிச் சென்றவர் பிரம்டனைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஆவார். விபத்தின் போது காரில் அவர் மட்டுமே இருந்தார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸார் சனிக்கிழமை உறுதிப்படுத்தினர்.

இந்த விபத்து குறித்து ஒன்டாரியோ மாகாண பொலிஸாரின் குற்றப் பிரிவு மற்றும் போக்குவரத்து விபத்து மேலாண்மைக் குழுவினர் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது அந்தப் பகுதியில் விபத்து நடந்த நேரத்தில் பதிவான ‘டேஷ்கேம்’ வீடியோ காட்சிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக போலீஸாரைத் தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.