சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), தனது உறுப்புறுரிமை விதிகளை தீவிரமாக மீறியதாகக் கூறி, Cricket Canada அமைப்பை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்துள்ளது.
இந்த முடிவு, இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற்ற ICC நிர்வாக சபை கூட்டத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது. Cricket Canada அமைப்பு தனது உறுப்பினர் கடமைகளை சரியாக நிறைவேற்றத் தவறியதாக ICC தெரிவித்துள்ளது.
Cricket Canada அமைப்பில் நிலவி வரும் நிர்வாக மற்றும் ஆளுமை தொடர்பான சிக்கல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் Cricket Canada தொடர்பாக ஊழல், நிர்வாக குறைபாடுகள் மற்றும் போட்டி ஒழுங்கு மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் வெளிவந்த நிலையில், ICC-யின் ஊழல் தடுப்பு பிரிவும் விசாரணையைத் தொடங்கியிருந்தது.
இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், கனடா தேசிய கிரிக்கெட் அணிகள் ICC அங்கீகரித்த சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியும் என ICC தெளிவுபடுத்தியுள்ளது. கனடிய வீரர்கள் நிர்வாகச் சிக்கல்களால் பாதிக்கப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இந்த விதிவிலக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனடா அணிகளின் பயிற்சி மற்றும் போட்டி நடவடிக்கைகளுக்கான நிதி, ICC நிர்வாகத்தின் மேற்பார்வையில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cricket Canada அமைப்பு மீண்டும் முழுமையான உறுப்புரிமை பெற, ICC நிர்ணயிக்கும் நிர்வாக மற்றும் அமைப்பு சார்ந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த முன்னேற்றங்களை ICC நியமிக்கும் கண்காணிப்பு குழு பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைநீக்கம் Cricket Canada அமைப்பிற்கு பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டாலும், கனடிய வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் உடனடியாக பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.