Reading Time: < 1 minute

வம்சாவளி அடிப்படையில் கனேடிய குடியுரிமை பெறுவதற்கான சட்ட மாற்றத்தைத் தொடர்ந்து குடியுரிமைச் சான்றிதழ்களைப் பெற்ற பலரிடம், அவற்றைத் திருப்பி ஒப்படைக்குமாறு கனேடிய அரசு கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil Business Directory

Bill C-3 எனப்படும் வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா கடந்த டிசம்பர் 15ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஏராளமானோர் கனேடிய குடியுரிமைச் சான்றிதழுக்காக விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களில் ஆயிரக்கணக்கானோருக்கு குடியுரிமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும், சான்றிதழ்களைப் பெற்றவர்களில் பலருக்கு தற்போது கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களமான IRCC சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கனேடிய குடியுரிமைப் பதிவாளர் பெக்கி சன் (Peggy Sun) கையொப்பமிட்டுள்ளதாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தில், சம்பந்தப்பட்ட நபர் கனேடிய குடியுரிமைச் சான்றிதழைப் பெறுவதற்குத் தகுதியற்றவராக இருக்கலாம் என்பதைக் காட்டும் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அவர்களது விண்ணப்பங்களையும் ஆதார ஆவணங்களையும் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாகவும், ஏற்கனவே வழங்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழ்களைத் திருப்பி ஒப்படைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, கனேடிய குடியுரிமை கிடைத்துவிட்டதாக நம்பி தங்களது எதிர்காலத் திட்டங்களை வகுத்திருந்தவர்களை அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சிலர் கனடாவுக்கு நிரந்தரமாகக் குடிபெயர்வதற்காக தங்களது வீடுகளை விற்பனை செய்யவும், வேலைகளை விட்டு விலகவும் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவர்கள் அந்தத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் வசிக்கும் சிலர், அங்குள்ள தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கனடாவில் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில், இந்தக் கடிதம் அவர்களுக்கு கடும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் ஏற்கனவே வசிப்பவர்கள் புதிய வேலைகளை ஆரம்பிப்பது, வீடுகளைப் பெறுவது மற்றும் தங்களது பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்ப்பது போன்ற திட்டங்களை மேற்கொண்டிருக்கலாம். அவர்களுக்கும் இந்த மீளாய்வு நடவடிக்கை நிச்சயமற்ற நிலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் இருந்திருந்தால், குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்னரே முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என புலம்பெயர்தல் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதலில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக நம்பிக்கையூட்டிவிட்டு, பின்னர் திடீரென சான்றிதழ்களைத் திருப்பிக் கேட்பது துரதிர்ஷ்டவசமானதும் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதுமாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடிதங்களைப் பெற்றவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிப்பதுடன், தகுதியான கனேடிய குடியுரிமை அல்லது புலம்பெயர்தல் சட்டத்தரணியின் ஆலோசனையைப் பெறுவது அவசியம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.