கனடா குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வரும் “மரியாதையற்ற” மற்றும் கடுமையான விமர்சனங்களை பென்சில்வேனியா மாகாண ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்டை புதன்கிழமை நேரில் சந்தித்த ஷாபிரோ, இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அமெரிக்க ஜனாதினதியின் கருத்துகளால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சுமுகமற்ற சூழலை ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ, ஒப்புக்கொண்டார்.
எங்கள் ஜனாதிபதி பொறுப்பற்ற, மரியாதையற்ற பேச்சுகளால் தற்போது அமெரிக்கா தங்களை வரவேற்காத ஒரு நாடாக இருப்பதாகப் பல கனடியர்கள் உணர்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
ஆனால் நான் கனடாவின் இறையாண்மையை முழுமையாக மதிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றுப் பேச்சுகள் ஒருபுறமிருக்க, டிரம்ப் அரசு விதித்துள்ள வர்த்தக வரிகள் இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன” என்று ஷாபிரோ குறிப்பிட்டார்.
டிரம்ப் தொடங்கிய வர்த்தகப் போர் மற்றும் கனடாவை அமெரிக்காவின் “51-வது மாநிலமாக” மாற்றிவிடுவேன் என்று அவர் தொடர்ந்து கூறிவரும் மிரட்டல்களால், ஒன்டாரியோ மற்றும் பென்சில்வேனியா இடையிலான வர்த்தகம் மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்று அவர் கவலை தெரிவித்தார்.
இதேவேளை, கனடா பொருளாதார மந்தநிலையைச் சந்திப்பதாகக் கூறி, “51-வது மாநிலம்!” என டிரம்ப் அண்மையில் சமூக ஊடகங்களில் மீண்டும் வம்புக்கு இழுத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட், “கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறாது” என்று திட்டவட்டமாகக் கூறினார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.