Reading Time: < 1 minute

கனடாவின் பீல் (Peel) பிராந்தியத்தில் உள்ள முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டாலர் மதிப்பிலான பொருட்களைத் திருடியதாக பிராம்ப்டனைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

சில்லறை விற்பனை நிலையங்களில் நடைபெறும் திருட்டுகள் மற்றும் அந்தப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வது குறித்து கடந்த மூன்று மாதங்களாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் 9-ஆம் திகதி பிராம்ப்டனில் உள்ள ஒரு வீட்டில் பொலிஸார் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது அங்கிருந்து பின்வரும் பொருட்கள் மீட்கப்பட்டன:

  • 300 மதுபான போத்தல்கள்
  • 100 கட்டிகள் வெண்ணெய்
  • 91 ஜாடிகள் நெய்

மீட்கப்பட்ட இந்தப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30,000 டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவை LCBO, Freshco, Shoppers Drug Mart மற்றும் Walmart போன்ற பல்வேறு வணிக நிலையங்களில் இருந்து திருடப்பட்டவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பிராம்ப்டனைச் சேர்ந்த பிந்து கோஹில் (Pintu Gohil) என்ற 48 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களைப் பாதுகாப்பில் வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 7-ஆம் திகதி அவர் பிராம்ப்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பீல் பிராந்தியத்தில் சமீபகாலமாக வெண்ணெய் மற்றும் நெய் போன்ற பொருட்கள் அதிகளவில் திருடப்படுவது அதிகரித்து வருவதாகவும், இது போன்ற சட்டவிரோதச் செயல்கள் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.